லண்டன்: பும்ரா நேற்று யார் முகத்தில் விழித்துவிட்டு பந்துவீச வந்தாரோ தெரியவில்லை, திறமைசாலியான அவருக்கு அதிருஷ்டம் கை கொடுக்கவில்லை. முக்கியமான நேரங்களில் எல்லாம் கெட்ட நேரம் பும்ராவை துரத்தி, துரத்தி அடித்தது.
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பகர் ஜமான் 106 பந்துகளில் 114 ரன்களை விளாசினார். இது அந்த அணி 338 ரன்களை குவிக்க வசதியாக அடித்தளம் அமைத்து கொடுத்தது.
ஆனால் பகர் ஜமான் 4 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா பந்தில் கேட்ச் கொடுத்தார். அந்த பந்து நோபால் என நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. பகர் ஜமான் விரைவில் அவுட்டாகியிருந்தால் இந்தியாவின் கை ஓங்கியிருக்க வாய்ப்பு இருந்தது.
அதேபோல மொகமது ஹபீஸ் (57 ரன்கள் குவித்தார்), கடைசி கட்டத்தில், அவர் அதிரடியாக ஆடினார். 49வது ஓவரில் இவர் பும்ரா பந்து வீச்சில் பௌல்ட் ஆனார். ஆனால் ஸ்டெம்பில் பந்து பட்டபோதும், பெய்ல்ஸ் கீழே விழவில்லை. இதனால் அது அவுட் இல்லை. இதை பார்த்த இந்திய வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன்பிறகு சில ஷாட்டுகளை ஹபீஸ் சிறப்பாக விளையாடினார்.