கொல்கத்தா: இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான நடப்புத் தொடரின், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில், மழையும், அதைத்தொடர்ந்த ஈரப்பதமும் இடையூறு விளைவித்ததால் போட்டி, ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய டி20 தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இதனிடையே, 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.
கடைசி டி20 போட்டியில் இந்திய அணி கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், தொடர்ச்சியாக பெய்த மழையால் ஆடுகளம் ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இதனால் ஒரு பந்துகூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது. தொடர் நாயகன் விருது தென் ஆப்பிரிக்க வீரர் ஜேபி டுமினிக்கு வழங்கப்பட்டது.