புனே: இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடைபெற உள்ளது.
சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வருகை தந்துள்ளது. இரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலிய தொடரில் ரன்கள் குவித்த இந்திய அணியின் துணை கேப்டன் கோஹ்லிக்கு இந்த போட்டி தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் புதுமுக வீரராக பவான் நெகி அணியில் இடம் பிடித்துள்ளார். யுவராஜ்சிங் இன்னும் 17 ரன்கள் எடுத்தால் 1,000 ரன்களை எட்டுவார்.
இலங்கை அணியின் தில்ஷன் கைவிரல் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பயிற்சியின் போது தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பினுரா பெர்னாண்டோ போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
அவருக்கு பதிலாக ஷமிந்தா எரங்கா சேர்க்கப்பட்டு இருக்கிறார். மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் இல்லாத நிலையில் வீரர்களின் காயம் இலங்கை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்தியா-இலங்கை அணிகள் இதுவரை 20 ஓவர் போட்டியில் 6 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா 3 வெற்றி பெற்றுள்ளன.