ராஞ்சி: ராஞ்சியில் இலங்கைக்கு எதிராக நடந்த இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.
மூன்று டி20 போட்டிகள் ஆடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி ஜார்க்கண்ட் தலைநகரில் உள்ள ராஞ்சி கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமால் பவுலிங் தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு ரோகித், ஷிகர் தவான் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. தவான் (51) அரை சதம் கடந்தார். ரோகித் சர்மா 36 பந்தில்43 ரன்களும் எடுத்து அசத்தினார். அதிரடியாக ஆடிய ரெய்னா 19 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். ரகானே 21 பந்தில் 25 ரன்களும், 12 பந்தில் ஹர்திக் பாண்ட்யா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து டோனி களம் இறங்கினார். சொந்த மைதானம் என்பதால் டோனி களம் இறங்கும்போது ரசிகர்கள் டோனி... டோனி... என கரகோசம் எழுப்பினார்கள். பாண்டியா அவுட் ஆன அடுத்த பந்தில் ரெய்னா அவுட் ஆக, கடைசி 7 பந்துகள் மீதமிருக்கையில் யுவராஜ் சிங் களம் இறங்கி அவர் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆனார். இதனால் திசாரா பெரேரா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
இதனால் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் இருந்தே சற்று தடுமாறியது.
குணதிலகா (2), தில்ஷன் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். ஜடேஜா சுழலில் சிக்கிய சண்டிமால் 31 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பும்ரா வேகத்தில் சேனனாயகே, சமீரா ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். மற்றவர்களும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழக்க இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதையடுத்து இந்திய அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமனில் உள்ளது. இந்தியா - இலங்கைக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டி நாளை மறுதினம் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் நடக்கிறது.