காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இலங்கைக்கு 6 வார கால பயணமாக விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சென்றுள்ளது. அங்கு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி , முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதன்படி இலங்கை அணி முதலில் பந்து வீச உள்ளது. இதற்கிடையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
இந்திய அணியில் இன்றைய போட்டியில் அறிமுக வீரராக ஹர்திக்பாண்ட்யா களம் இறங்கியுள்ளார். இன்றைய ஆட்டத்தின் மூலம், அஸ்வின் தனது 50 -டெஸ்ட் போட்டியை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பயிற்சியாளராக பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டார். ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு இந்திய அணி களம் இறங்கும் முதல் போட்டி என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
ஷிகர் தவான், அபினவ் முகுந்த், புஜாரா, விராட் கோஹ்லி, ரகானே, ஹர்திக் பாண்ட்யா, சகா, ரவிசந்திரன் அஷ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், முகம்மது சமி.
இலங்கை அணி வீரர்கள்:
திமுத் கருனரத்னே, உபுல் தரங்கா, குசல் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா, ஏஞ்சலே மேத்யூஸ், அசேலா குணரத்னே, நிரோஷன் டிக்வெல்லா, தில்ருவன் பெரேரா, ரங்கனா ஹெராத், லஹிரு குமாரா, நுவன் பிரதீப்.