கொல்கத்தா: இந்தியா, நியூசிலாந்து இடையிலான கொல்கத்தா 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு இன்றைய முதல் நாள் சரியாக அமையாமல் போய் விட்டது. 7 விக்கெட்களை இழந்த இந்தியா 239 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
இந்தியா நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுலுக்குப் பதில் ஷிகர் தவான் சேர்க்கப்பட்டார். கம்பீர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவானுக்கு இடம் கிடைத்தது. ஆனால் தவான் ஏமாற்றி விட்டார்.
ஒரே ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். அவரை குறி வைத்துத் தூக்கி விட்டார் நியூசிலாந்தின் ஹென்றி. தொடர்ந்து அடுத்தடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் இ்ந்தியா விக்கெட்களைப் பறி கொடுத்தது. நியூசிலாந்தின் வேகப் பந்து வீச்சாளர்கள் இந்தியாவை ஸ்தம்பிக்க செய்து விட்டனர். முரளி விஜய் 9, விராத் கோஹ்லி 9, ரோஹித் சர்மா 2 ரன்களில் வீழ்ந்தனர்.
புஜாரா கடுமையாக போராடி 87 ரன்கள் எடுத்தார். அதேபோல அஜிங்கியா ரஹானே 77 ரன்களை எடுத்தார். அஸ்வின் பங்கு 26. இறுதியில் இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களுடன் பரிதாபமாக இருந்தது. தற்போது களத்தில் சஹா, ஜடேஜா ஆகியோர் உள்ளனர்.
நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 3 விக்கெட் சாய்த்தார். போல்ட்,வாக்னர் தலா 1 விக்கெட் எடுத்தனர். படேலுக்கு 2 விக்கெட் கிடைத்தது.
முன்னதாக இந்திய அணி கேப்டன் கோஹ்லி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் 2வது மாற்றமாக உமேஷ் யாதவுக்குப் பதில் புவனேஷ் குமார் இன்று சேர்க்கப்பட்டார். மறுபக்கம் நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் காய்ச்சல் காரணமாக இன்று ஆடவில்லை. அவருக்குப் பதில் ராஸ் டெய்லர் கேப்டனாக பணியாற்றினார்.