தரம்சலா: இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் சீர்குலைந்து போனது நியூசிலாந்து பேட்டிங்.
43.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்த நியூசிலாந்து 190 ரன்களை மட்டுமே எடுத்து சுருண்டது. டாம் லாதம் சிறப்பாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார். டிம் செளதி 55 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை.
இந்தியா நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா வென்று விட்டது. இந்த நிலையில் இன்று ஒரு நாள் தொடர் தொடங்கியது. முதல் போட்டி தரம்சலாவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற கேப்டன் டோணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தொடங்கியது. இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட்டிருந்தார். மந்தீப் சிங்,. ஜெயந்த் யாதவ், தவல் குல்கர்னி ஆகியோர் சேர்க்கப்படவில்லை.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் மற்றும் பாண்ட்யா ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிப் போய் விட்டது நியூசிலாந்து. இதன் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன. ஒரு கட்டத்தில் 50 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்திருந்தது நியூசிலாந்து. 14 ரன்களில் முதல் விக்கெட்டையும், 29ல் 2வது விக்கெட், 33 ரன்களில் 3வது விக்கெட், 43 ரன்களில் 4வது விக்கெட், 48 ரன்களில் 5வது விக்கெட்டைப் பறி கொடுத்திருந்தது நியூசிலாந்து.
நியூசிலாந்து அணியில் 3 பேர் டக் அவுட் ஆனார்கள். அதில் ராஸ் டெய்லர் முக்கியமானவர். வேகப் பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவும், பாண்ட்யாவும் அனல் பறக்க பந்து வீசியதால் நியூசிலாந்தால் அதை சமாளிக்க முடியவில்லை.
டாம் லாதம்தான் சற்று கவுரவத்தைக் காக்கும் வகையில் ஆடினார். தனி ஒருவனாக அவர் போராடி நிறுத்தி நிதானமாக ஆடியதால் 100 ரன்களைத் தாண்ட முடிந்தது நியூசிலாந்து அணியால். இருதியில் டாம் மற்றும் டிம் செளதி ஆகியோரின் புண்ணியத்தால் நியூசிலாந்து 150 ரன்களைத் தாண்டியது. அப்படியும் கூட மற்ற வீரர்கள் சரிந்ததால் 190 ரன்களோடு முடிந்து போனது அவர்களின் ரன் வேகம்.
இந்தியத் தரப்பில் பாண்ட்யா, அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், உமேஷ் யாதவ், கேதார் ஜாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.