அதிரடி டெஸ்ட்
புனேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை தோற்கடித்து காலரை தூக்கிவிட்டிருந்த இந்தியாவின் தன்னம்பிக்கையில் சுத்தியலால் அடித்தது. ஆனால்,விடுமா இந்திய அணி. பெங்களூரில் நடந்த 2வது டெஸ்டில் திருப்பியடித்தது. 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை உயிர்ப்போடு வைத்தது.
டிரா போட்டி
டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடந்த 3வது டெஸ்டில் வெற்றி பெறும் தருவாயில் ஆஸ்திரேலிய அணியின் இறுதிகட்ட பார்ட்னர்ஷிப் போட்டியை டிராவில் கொண்டுசென்று விட்டது. எனவே தரம்சாலா டெஸ்ட்தான் தொடரின் வெற்றி தோல்வியையே தீர்மானிக்கும் என்ற பரபரப்பு நிலை ஏற்பட்டது. ஆனால் அப்போதுதான் அந்த அதிர்ச்சி செய்தி வெளியானது. கடைசி டெஸ்டில் கேப்டன் கோஹ்லி காயத்தால் ஆட முடியாது என்பதே அந்த சேதி.
ரஹானே கேப்டன்
இந்திய அணியின் பேட்டிங் மிஷின் கோஹ்லி இந்த தொடரில் ரன் குவிக்கவில்லை என்றபோதிலும், அவர் மைதானத்தில் இருப்பதே எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும், இந்திய அணிக்கு உத்வேகத்தை கொடுக்கும். கோஹ்லி இல்லாத இந்திய அணியை இந்திய ஏ அணி என்று வர்ணித்தனர் வர்ணனையாளர்கள். முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கு தலைமையேற்கும் ரஹானே மீது பல கிரிக்கெட் பண்டிதர்களுக்கு நம்பிக்கையும் இல்லை.
கேப்டன் மூவ்
இதைப்பற்றியெல்லாம் ரஹானே கண்டுகொள்ளவில்லை. முதல் இன்னிங்சில் ஆஸி. கேப்டன் ஸ்மித் சதம் அடித்தும், 300 ரன்களில் அந்த அணியை ஆல்அவுட் செய்து பவுலர்கள் அசத்த, 332 ரன்கள் குவித்து இந்திய பேட்ஸ்மேன்களும் கை கொடுத்தனர். 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 137 ரன்களிலேயே சுருண்டதில் ரஹானேவின் கேப்டன்ஷிப்புக்கு முக்கிய பங்கு உண்டு. பவுலர்களை திறம்பட பயன்படுத்தினார் ரஹானே.
தடுமாறிய இந்தியா
106 என்ற வெற்றி இலக்கை துரத்தியது இந்திய அணி. இப்படிப்பட்ட லோ-ஸ்கோர் போட்டிகள் மிகவும் ரிஸ்கானவை. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்தையும் ஜாக்கிரதையாக எதிர்கொள்ள வேண்டிவரும். பல நேரங்களில் இதுபோன்ற லோ-ஸ்கோர்களை எட்ட முடியாமல் அணிகள் வீழ்வது வாடிக்கை. இன்றும் அதேபோல 46 ரன்கள் வரை பிரச்சினையின்றி போன இந்திய அணி ஸ்கோருக்கு திடீரென முட்டுக்கட்டை விழுந்தது. அடுத்தடுத்து முரளி விஜய், புஜாரா வெளியேறிய நிலையில் இந்தியா தடுமாறியது.
ரஹானே அதிரடி
இந்த கட்டத்தில்தான் களம் புகுந்தார் கேப்டன் ரஹானே. கேப்டன் ஆட்டம் என்பார்களே அதை ஆடிக்காட்டினார் அவர். ஆஸி. அணி கை ஓங்கிய அந்த நேரத்தில் தடுப்பு ஆட்டம் ஆடினால் எதிரணியினர் இன்னும் தன்னம்பிக்கையோடு பந்தை வீசி சாய்த்துவிடுவார்கள் என்பதை உணர்ந்த ரஹானே ரிஸ்க் எடுத்து ஆட ஆரம்பித்தார். இந்த தொடரில் ஆஸி. அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்ட பேட் கம்மின்ஸ் ஓவரை பதம் பார்த்து தான் ஒரு சிறந்த கேப்டன் மட்டுமல்ல, தேர்ந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார்.
சிக்சரால் பதிலடி
'அரவுண்ட் தி விக்கெட்' திசையிலிருந்து ஓடி வந்து கம்மின்ஸ் வீசிய பந்தை மிட் விக்கெட் திசையில் அனாயாசமாக சிக்சர் விளாசினார் ரஹானே. அந்த பந்து 146 கிலோ மீட்டர் வேகத்தில் பவுன்ஸ் ஆகி வந்ததை ரஹானே அலட்சியம் செய்தார். அடுத்த பந்தையும் கம்மின்ஸ் பவுன்சராக வீச, ஸ்டம்பை விட்டு சற்றே விலகி, சேவாக் பாணியிலான ஒரு கட் ஷாட் மூலம், ஆப்சைடில் சிக்சராக மாற்றினார் ரஹானே. முன்னதாக, கம்மின்ஸ் வீசிய ஓவரில் பவுன்சர் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியிருந்தார் ரஹானே.
அபார வெற்றி
இந்த அதிரடியை எதிர்பார்க்காத ஆஸ்திரேலிய அணி வீரரர்களின் தலை அப்போதே தொங்கிவிட்டது. தக்க நேரத்தில் அதிரடி காட்டிய ரஹானே, ராகுலுடன் சேர்ந்துது அபார வெற்றியை பதிவு செய்தார். கேப்டன் பொறுப்பை ஏற்ற முதல் டெஸ்ட்டிலேயே வெற்றி பெற்று சாதித்து காட்டினார் ரஹானே. விராத் கோஹ்லியை தாண்டி இந்திய அணிக்காக ஒரு கேப்டன் தயார் என்பதை இந்த டெஸ்ட் போட்டி நிரூபித்து காட்டிவிட்டது. கங்குலி வார்த்தைகளில் கூற வேண்டுமானால், "ரஹானே கேப்டன்ஷிப் அபாரம். அவர் வித்தியாசமாக எதையும் செய்யவில்லை. அவரது வேலையில் கவனமாக இருந்து செயல்பட்டார்".