கொழும்பு: பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது.
வரும், 20ம் தேதி முதல், செப்டம்பர், 3ம் தேதி வரை, இந்தியாவுடன், 5 ஒருதினப் போட்டித் தொடரில் இலங்கை விளையாட உள்ளது. அதன்பிறகு, பாகிஸ்தானுடன் விளையாடஉள்ளது, அதில் ஒரு போட்டியை பாகிஸ்தானில் நடத்துவதற்கு, இலங்கை கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த, 2009ல், பாகிஸ்தானுக்கு சென்றது.
அப்போது, லாகூர் மைதானத்தில் இருந்து திரும்பிய இலங்கை வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், இலங்கை வீரர்கள் ஏழு பேர் காயமடைந்தனர். அதையடுத்து பாதுகாப்பு காரணங்களைக் கூறி, இலங்கை அணி, பாதியிலேயே நாடு திரும்பியது.
அதன்பிறகு, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள எந்த அணியும் முன்வரவில்லை. கடைசியாக, 2015ல், ஜிம்பாப்வே அணி, 5 ஒரு தினப் போட்டித் தொடரில் பங்கேற்றது.
இந்த நிலையில், கொழும்புவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் பொதுக் குழு கூட்டம் நடந்தது. அப்போது, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்தது.
இந்தியாவுக்கு எதிரான, ஒருதினப் போட்டித் தொடருக்குப் பிறகு, பாகிஸ்தானுடன் மூன்று டி20 போட்டிகளில் இலங்கை விளையாட உள்ளது.
அதில் ஒரு போட்டியை, லாகூரில் நடத்துவது குறித்து, ஆலோசித்து முடிவு தெரிவிக்கப்படும் என, இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.2009ல் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான், தனது போட்டிகளை, ஐக்கிய அரசு எமிரேட்டில் நடத்தியது. 2010ல் ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளை, இங்கிலாந்தில் நடத்தியது.
கடந்த, 2008ல் மும்பையில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடவில்லை.