ஹைதராபாத்: எடுத்த உடனேயே அதிரடியாக ஆடுவதற்கு என்ன காரணம் என்பதை யுவராஜ்சிங்கே போட்டிக்கு பிறகு தெரிவித்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடக்க பந்தயத்தில் ஹைதராபாத் அணி வீரரான யுவராஜ்சிங் 27 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார்.
அவர் ஐபிஎல் ஒன்றில் எடுத்த அதிவேக அரை சதத்தையும் நேற்று பதிவு செய்தார். போட்டிக்கு பிறகு அவர் கூறுகையில், நான் களம் புகும்போது எதிர்முனையில் நின்ற சக பேட்ஸ்மேன் ஹென்ரிகுயீசிடம், சில பந்துகளை சந்தித்துவிட்டு பிறகு அதிரடியை ஆரம்பிக்க போகிறேன் என கூறினேன். ஆனால் நான் சந்தித்த முதல் இரு பந்துகளுமே பேட்டின் மத்தியில் சரியாக பட்டது. அப்படி பேட்டில் பந்து பட்டதுமே எனக்கு நம்பிக்கை துளிர்த்துவிட்டது. எனவே அதன்பிறகு உடனடியாக அதிரடியை ஆரம்பித்தேன்.
மனதில் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. கடந்த வருடங்களாக எனதது பேட்டிங்கில், ஏற்ற, இறக்கம் இருந்து வந்தது. ஆனால் இப்போது நான் பழைய பேட்டிங் ஸ்டைலை கண்டெடுத்துவிட்டேன். இந்திய அணிக்கு நான் திரும்பியதால் நான் மனதளவில் பதற்றமின்றி ஆட முடிகிறது. இதுவும் எனது அதிரடிக்கு காரணம். இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டுமே என்ற பரபரப்பில் சில காலம் எனது இயல்பான ஆட்டத்தை இழந்திருந்தேன் என்று கூறியுள்ளார் யுவராஜ்சிங்.