டெல்லி: நடப்பு ஐபிஎல் தொடரின்போது பேஸ்புக் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்த பேச்சாகத்தான் இருந்தது. மற்ற ஐபிஎல் அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்துத்தான் அதிக அளவில் செய்திகள், படங்கள், கேலிச் சித்திரங்கள் வலம் வந்தன.
மேலும் பேஸ்புக்கில் அதிகம் விரும்பப்பட்ட அணியாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே திகழ்ந்தது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மாதிரியாக சென்னைக்கு ஆதரவு காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் 8 ஐபிஎல் அணிகளுக்கும் நிலவிய ஆதரவார்கள் குறித்த மேப்பை உருவாக்கியுள்ளது பேஸ்புக். அதில் பெரும்பாலான அணிகளுக்கு அவர்களது உள்ளூர் மாநிலங்களில்தான் அதிக ஆதரவு காணப்பட்டது.
அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நாடு முழுவதும் ஆதரவு காணப்பட்டது. குறிப்பாக டெல்லியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை விட சென்னைக்கே அதிக ஆதரவு காணப்பட்டது.
மேலும் ஐபிஎல் அணிகள் இல்லாத மாநிலங்களிலும் சென்னை அணிக்கே அதிக ஆதரவு காணப்பட்டது. மற்ற அணிகளுக்கு இங்கு ஆதரவு அதிகம் இல்லை.
பேஸ்புக்கில் அதிக அளவில் லைக் பெற்ற அணியும் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். இந்த விஷயத்தில் பிற அணிகளை விட சென்னையின் கையே ஓங்கியுள்ளது.
குர்கான் பகுதியில், கிஹ்ஸ் லெவன் பஞ்சாபுக்கோ அல்லது டெல்லி டேர்டெவில்ஸுக்கோ ஆதரவு அதிகம் இல்லை. மாறாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அங்கு ஆதரவு அதிகம் காணப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிக ஆதரவு காணப்படுவதற்கு முக்கியக் காரணமாக டோணி கூறப்படுகிறார். அதேசமயம், சென்னை அணி அனைத்துத் துறையிலும் அட்டகாசமாக விளையாடி வருவதும், இன்னொரு காரணமாக பார்க்கப்படுகிறது.