சென்னை: சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு கை விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளதால், அடுத்த இரண்டு போட்டிகளில் சென்னை அணிக்காக அஸ்வின் விளையாட மாட்டார்.
சென்னை சேப்பக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர் ராபின் உத்தப்பா, மணிஷ் பாண்டே ஆகியோரின் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தி சென்னைக்கு முக்கிய நேரத்தில் பிரேக்குகள் கொடுத்தார்.
இந்நிலையில், பீல்டிங்கின் போது அஸ்வினுக்கு கை விரல்களில் காயம் ஏற்பட்டது. நடுவிரலில் சதைகள் கிழிந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து களத்தில் இருந்து வெளியேறிய அவர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கைவிரல்களில் தையல் போடப்பட்டது. காயம் காரணமாக அவருக்கு இரண்டு போட்டிகளில் ஓய்வளிக்க சென்னை அணி முடிவெடுத்துள்ளது. சென்னை அணி நாளை மீண்டும் கொல்கத்தா அணியையும் மே 2ம் தேதி ஹைதரபாத் அணியையும் எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.