பெங்களூர்: 9வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று இரவு பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கு பெங்களூர் வாழ் தமிழர்களும், தெலுங்கர்களும் எந்த அணிக்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்று அறிந்து கொள்ள ரசிகர்களுக்கு ஆர்வம் இருப்பது இயல்பானதே. ஏனெனில் ஹைதராபாத் ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகர் என்பதால் தெலுங்கர்களுக்கும், சன்டிவி குரூப்பை சேர்ந்த அணி என்பதால் தமிழர்களுக்கும் அந்த அணி வெற்றி மீது ஆர்வம் இருக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து 'ஒன்இந்தியா' பெங்களூர்வாழ் தமிழர், தெலுங்கர்களிடம் கருத்து கேட்டது. அவர் கூறியதன் தொகுப்பு இதோ:
ராகவேந்திரா-ஐடி ஊழியர்: நான் ஆந்திராவை சேர்ந்தவன் என்றாலும் பெங்களூரில் 10 வருடமாக தங்கியிருந்து பணியாற்றி வருகிறேன். ஹைதராபாத்தைவிட பெங்களூர் அணி வெல்ல வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். விராட் கோஹ்லி இதற்கு முக்கிய காரணம்.
சுஜாதா ரெட்டி-இல்லத்தரசி: திருமணத்திற்கு பிறகு நான் பெங்களூரில் செட்டில் ஆகியுள்ளேன். எனவே எனது சொந்த மாநிலத்தை சேர்ந்த ஹைதாராபாத் அணிக்குதான் நான் சப்போர்ட் செய்வேன். ஆனால், எனகு டீனேஜ் மகன்கள் விக்கியும், அலெக்சும், விராட் கோஹ்லி ரசிகர்கள். அவர்கள் பெங்களூர் அணியை சப்போர்ட் செய்கிறார்கள். எங்கள் வீட்டுக்குள்ளேயே 2 அணி ஆதரவாளர்களும் மோதிக்கொள்வோம்.
கிழக்கு பெங்களூரில் ரியல் எஸ்டேட் நடத்தும் மகேஷ் ரெட்டி: நான் ஹைதராபாத்தை சேர்ந்தவன் என்றபோதிலும், பெங்களூர் அணி வெல்வதையே விரும்புகிறேன். சிறந்த அணியாக இருந்தாலும் பெங்களூர் இதுவரை கோப்பையை வென்றதில்லை. ஹைதராபாத் அணி டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரிலாவது கோப்பையை வென்றுள்ளது.
நெல்லையிலிருந்து பெங்களூரில் செட்டிலாகியுள்ள தொழிலதிபர் ரகு: சன் குரூப்பை சேர்ந்த டீம் என்றாலும் கூட ஹைதராபாத் தோற்க வேண்டும் என்பதே எனது விருப்பம். வார்னரை வைத்துக்கொண்டு ஜெயித்துவிடலாம் என நினைக்கிறார்கள். இப்போதுள்ள பெங்களூர் அணி கோப்பையை வெல்லாவிட்டால் வேறு எப்போதுதான் வெல்லும்? ஏனெனில் இப்போது பெங்களூர் அணி ஃபுல் ஃபார்மிலுள்ளது.
மதுரையை சேர்ந்த ஆரகிள் ஊழியர் விஜயலட்சுமி: ஹைதராபாத் ஏனோ அன்னியப்பட்டதை போல உள்ளது. பெங்களூர் தமிழகத்தின் ஒரு பகுதிபோலத்தான் மனதுக்கு தோன்றுகிறது. இதற்காகவே நான் பெங்களூருக்கு சப்போர்ட் செய்வேன்.