ராஜ்கோட்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 31-வது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ். 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி 5-வது வெற்றியைப் பெற்றதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ராஜ்கோட்டில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஜாகீர் கான் முதலில் பந்து வீச முடிவு செய்தார். குஜராத்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சுமித் (15), மெக்கல்லம் (1) என விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பின்ச் 5 ரன்களில் கேட்ச் ஆனார்.
இதன் பின்னர் களமிறங்கிய ரெய்னாவும், தினேஷ் கார்த்திக்கும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடியை அமித் மிஸ்ரா பிரித்தார். 24 ரன்கள் எடுத்திருந்த ரெய்னா ஸ்டெம்பிட் முறையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய கார்திக் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஜடேஜா (36) அதிரடியாக ஆடியதால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் நதீம் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
குஜராத்தை தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு ரிஷாப் பந்தும், டி காக்கும் சிறப்பான துவக்கம் தந்தனர். இந்த ஜோடி குஜாராத் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்க விட்டது. 13.3 ஓவர்களில் 115 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் ஜடேஜா. 40 பந்துகளைச் சந்தித்த பந்த் 69 ரன்கள் எடுத்து விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார்.
இதையடுத்து சாம்சன் களமிறங்க, டி காக் 45 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் டுமினி களமிறங்க, ஜடேஜா பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி ஆட்டத்தை முடித்தார் சாம்சன். 17.2 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது டெல்லி. ஆட்டநாயகனாக பந்த் தேர்வு செய்யப்பட்டார்.