மும்பை: ஐ.பி.எல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ரோகித், பொல்லார்டு அதிரடியால் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழத்தியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 24 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. கொல்கத்தா அணியில் உத்தப்பாவும், காம்பீரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா அணியில் காம்பீர் அதிகபட்சமாக 45 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உத்தப்பா 20 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். மும்பை அணியில் சவுத்தி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
கொல்கத்தாவை தொடர்ந்து மும்பை அணி களமிறங்கியது. பார்த்தீவ் பட்டேல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ரோகித் சர்மாவுடன் ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் சீரான வேகத்தில் ரன் குவித்தனர்.
சிறப்பாக விளையாடி வந்த ராயுடு 20 பந்தில் 32 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கருணல் பாண்ட்யா 6 ரன்களிலும், பட்லர் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் 6-வது விக்கெட்டிற்கு பொல்லார்டு களமிறங்கினார். பொல்லார்டு தொடக்கம் முதலே கொல்கத்தா வீரர்களின் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார்.
சதீஸ் வீசிய 16-வது ஓவரில் பொல்லார்டு 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதேபோல் உனத்காட் வீசிய 18-வது ஓவரிலும் 3 சிக்ஸர்கள் விளாசி மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
மும்பை அணி 12 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. பொல்லார்டு 17 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். கடைசி வரை நிலைத்து நின்று விளையாடிய ரோகித் சர்மா 49 பந்தில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.