இந்தூர்: பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில், பட்லர், நிதிஷ் ராணா அட்டகாசமாக சிக்சர் மழை பொழிந்து அசத்தினர்.
இந்தூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக்கின் 22வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ஆம்லாவின் அதிரடியால் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரராக களமிங்கிய கடைசி வரை ஆட்டம் காட்டிய ஆம்லா 60 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர் என 104 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு பட்லர், ராணா ஜோடி அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். இருவரும் பஞ்சாப் பவுலர்களின் பந்துவீச்சை பதம்பார்த்தனர். இருவரும் இணைந்து பஞ்சாப் பந்துவீச்சை பவுண்டரி, சிக்சர்களாக விளாசி தள்ளினர்.
மோகித் சர்மா வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய பட்லர், சந்தீப் சர்மா வீசிய 13வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய பட்லர் 37 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சர் என 77 ரன்கள் குவித்து அவுட்டானார்.
அதேபோல் வான வேடிக்கை காட்டிய ராணா, 34 பந்தில் 7 சிக்சர்களுடன் 62 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால் மும்பை அணி 15.3 ஓவரில் 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சிக்சர் மழை:
இந்தூர் மைதானம் சிக்சர் களம் என்பதை நேற்றைய போட்டியிலும் நிரூபனமானது. பஞ்சாப் அணியில் ஆம்லா (6), மேக்ஸ்வெல் (3) சேர்ந்து மொத்தமாக 9 சிக்சர்கள் பறக்கவிட்டனர். மும்பை அணி சார்பில் பார்த்தீவ் (2), பட்லர் (5), ராணா (7), ஹர்திக் பாண்டியா (1) என மொத்தமாக 15 சிக்சர்கள் அடித்தனர்.