இந்தூர்: ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தூரில் நடைபெற்ற ஐபிஎல் 22-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிங்கிய அம்லா 60 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர் என 104 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மார்ஷ் 26 (21), சாஹா 11 (15), மேக்ஸ்வெல் 40 (18) ரன்களும் எடுத்திருந்தனர். மும்பை அணியின் சார்பில் மிட்செல் மிக்லினாகன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 199 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய பட்லர் 37 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சர் என 77 ரன்களை குவித்தார். அதேபோல் அதிரடி காட்டிய ராணா 7 சிக்சர்களுடன் 34 பந்தில் 62 ரன்கள் சேர்த்தார்.