ராஜ்கோட்: ராஜ்கோட்டில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. இதில் டாசில் வென்ற குஜராத் லயன்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆம்லா (65), ஷேன் மார்ஷ் (30), மேக்ஸ்வெல் (31), அக்சார் பட்டேல் (34) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து ஆடிய குஜராத் லயன்ஸ் அணி தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது. மெக்கல்லம் 6, பின்ச் 13, கேப்டன் ரெய்னா 32 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
இருப்பினும் தினேஷ் கார்த்திக் மட்டும் கடைசி வரை அவுட்டாகாமல் 44 பந்தில் 58 ரன்கள் சேர்க்க, குஜராத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் பஞ்சாப் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் சந்தீப் ஷர்மா, கரியப்பா, அக்சார் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.