புனே: ஐபிஎல் கிரிக்கெட் 2017 போட்டித் திருவிழா இந்தியாவில் முக்கிய நகரங்களில் உற்சாகமாக நடந்துவருகிறது.அதன் தொடர்ச்சியாக இன்று புனே சூப்பர் ஜெயன்ட் அணியும்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் புனே நகரில் மோதுகின்றன. இரவு 8மணிக்கு விளையாட்டு தொடங்கவுள்ளது.
புனே சூப்பர் ஜெயன்ட் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 4ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியைப் பெற்றதும் அடங்கும். சரியான நேரத்தில் விக்கெட் கீப்பர் டோணி, ரஹானேவும் ஸ்ட்ராங் பார்முக்கு திரும்பியிருப்பதும், ஓப்பன் பேட்ஸ் மேன் திரிபாதியின் நேர்த்தியான பேட்டிங்கும் புனே அணியின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. சொந்த ஊரிலும் வெற்றிப்பயணத்தை நீட்டிப்பதில் ஸ்டீவன் சுமித் அணியினர் வேகம் காட்டுகிறார்கள்.
முன்னாள் ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைச் சேர்த்துள்ளது. முந்தைய ஆட்டத்தில் 131 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா அணி அதை வைத்துக் கொண்டு பெங்களூருவை 49 ரன்களுக்குள் சுருட்டி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
''கடைசி வரை நம்பிக்கையையும், உத்வேகத்தையும் இழக்காமல் களத்தில் அதி தீவிரமாக செயல்படவேண்டும். சற்று தளர்ந்தாலும் அணியில் இடத்தை இழக்க நேரிடும்'' என்று கம்பீர் சக வீரர்களுக்கு கொடுத்த எச்சரிக்கை நன்றாகவே வேலை செய்தது. பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் வலுவாக உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை புனே அணி வெல்லுமா என்பது இன்று இரவு தெரியும்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில், இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 4 ஆட்டங்களில் வென்றுள்ள புனே சூப்பர் ஜெயன்ட் அணி இன்று நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முந்தைய போட்டிகளின் ஹீரோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வேகப் பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர் நிலே, இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.