ராஜ்கோட்: குஜராத் - மும்பை அணிகளுக்கு இடையான ஐபிஎல் லீக் சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய பும்ரா மும்பை வெற்றிக்கு வித்திட்டார்.
ஐபிஎல் 10-வது சீசனின் 35வது லீக் ஆட்டம் நேற்றிரவு ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாசில் வென்று முதலில் களமிறங்கிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.
இதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடைசி பந்தில் ஒரு ரன் தேவைபட்ட நிலையில் மும்பை வீரர் க்ருணால் பாண்ட்யாவை ரவீந்திர ஜடேஜா அற்புதமாக ரன்-அவுட் செய்தார். இதனால் 20 ஓவர்களின் முடிவில் 153 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதையடுத்து ஆட்டம் சமனில் முடிவடைந்தது
ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு பொல்லார்டு மற்றும் பட்லர் களமிறங்கினர். குஜராத் அணியின் பால்க்னர் பந்து வீசினார். முதல் பந்தில் பட்லர் ஒரு ரன்களை எடுத்தார். இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பொல்லார்டு, மூன்றாவது பந்தை சிக்சருக்கு விளாசினார். 4வது பந்தில் பொல்லார்டு கேட்ச் ஆக, 5-வது பந்தில் பட்லர் கேட்ச் ஆனார். இதனால், மும்பை அணி சூப்பர் ஓவரில் 11 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
இதன்பின்னர் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் பின்ச், மெக்கல்லம் களமிறங்கினர். மும்பை அணியின் சார்பில் பும்ரா பந்துவீசினார். முதல் பந்தை பும்ரா நோ-பாலாக வீச குஜராத் அணிக்கு 'ப்ரீ ஹிட்' கிடைத்தது. ஆனால், அதையும் சரியாக பயன்படுத்தாத பின்ச் ஒரு ரன் மட்டும் எடுத்தார். இரண்டாவது பந்தை வைடாக பும்ரா வீசினார். இருப்பினும் மனம் தளராமல் அடுத்தடுத்த பந்துகளை அபாரமாக வீசி குஜராத் அணியை திணறிடித்தார்.
கடைசி பந்தில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு தள்ளப்பட்டது குஜராத். அதிலும் மெக்கல்லம் ஒரு ரன்களை மட்டுமே தட்டிவிட்டார். இதனால் பரபரப்பான இப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் அபாரமாக பந்து வீசி மும்பையின் வெற்றிக்கு வித்திட்டார் பும்ரா.