ராஜ்கோட்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் சூப்பர் ஓவரில் குஜராத் லயன்ஸ் அணி தோல்வியடைந்தது.
ஐபிஎல் 10வது சீசனின் 35வது லீக் ஆட்டம் நேற்று இரவு ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் லயன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் கேப்டன் ரெய்னா பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.
துவக்க வீரர் இஷான் கிஷ்ன் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார். ரவீந்திர ஜடேஜா 28, ஆண்ட்ரே டை 26 ரன்கள் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் க்ருணால் பாண்டியா 3 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, மலிங்கா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதன் பின்னர் 154 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரர் பார்தீவ் படேல் மட்டும் அதிகபட்சமாக 44 பந்துகளில் 9 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 70 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். கடைசியில் அதிரடியாக ஆடிய க்ருணால் பாண்டியா 29 ரன்கள் குவிக்க இரு அணிகள் இடையேயான போட்டி டிரா ஆனது.
இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 11 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய குஜராத் லயன்ஸ் 5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.