பெங்களூர்: ஐ.பி.எல் சீசன் 10-ன் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் லயன்ஸ் அணி வெற்றி பெற்றது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையோன லீக் ஆட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் டாசில் வென்ற குஜராத் லயன்ஸ் கேப்டன் ரெய்னா பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கெய்ல், விராட் கோஹ்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்கம் முதலே இருவரும் திணறினார்கள். அணியின் ஸ்கோர் 22 ரன்னாக இருக்கும்போது கோஹ்லி (10), கெய்ல் (8), டிராவிஸ் ஹெட் (0) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
4-வது விக்கெட்டுக்கு டி வில்லியர்ஸ் உடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இவர் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டி வில்லியர்ஸ் 5 ரன்னில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். மந்தீப் சிங் 8 ரன்னில் ஏமாற்றினார். நெஹி அதிரடியாக விளையாடி 19 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் லயன்ஸ் அணி 13.5 ஓவரரில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்ச் அதிகபட்சமாக 34 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 6 சிக்ஸர்களை விளாசினார். ரெய்னா 30 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
3 விக்கெட்டுகளை சாய்த்த டையி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 8 போட்டிகளில் விளையாடி உள்ள குஜராத் அணி இது 3-வது வெற்றி. 9 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் 6 வது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இனி மீதமுள்ள போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பெங்களூர் அணி உள்ளது.
கேப்டன் விராட் கோஹ்லி, கெயில் அதிரடிக்கு திரும்ப வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.