மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சில போட்டிகளில் விராட் கோஹ்லி ஆடப்போவதில்லை என தெரிகிறது.
பத்தாவது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் 5ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. 2வது போட்டி 8ம் தேதியும், 3வது போட்டி 10ம் தேதியும் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக இன்று நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த கோஹ்லி, நான் இன்னும் 100 சதவீதம் தோள்பட்டை காயத்திலிருந்து விடுபடவில்லை என்பதால், சில வாரங்கள் ஓய்வு தேவைப்படும் என்றார். எனவே ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் அவர் பெங்களூர் அணியை வழி நடத்த களம் புகப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.
முதல் 3 போட்டிகளுக்கு பிறகு அவர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கலாம். முன்னதாக ராஞ்சியில் நடைபெற்ற, ஆஸி.க்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின்போது ஃபீல்டிங் செய்த விராட் கோஹ்லி தோள்பட்டையில் காயமேற்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் நாலாவது டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை.
ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் கோஹ்லி ஆடாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.