பெங்களூர்: இன்று நடைபெற்ற ஐபிஎல் 9வது சீசனுக்கான ஏலத்தில், பவன் நேகி ரூ.8.5 கோடிக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், நடப்பு சீசனில், இந்திய வீரர்களிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
டெல்லியை சேர்ந்த பவன் நேகி, கடந்த 2 ஐபிஎல் சீசன்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய நிலையில், இன்றைய ஏலத்தில், டெல்லி அணியால் ரூ.8.5 கோடி விலைக்கு வாங்கப்பட்டுள்ளார். இதன் மூலம், 9வது சீசன் ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
காலையில் நடந்த ஏலத்தின்போது, யுவராஜ்சிங்கை ரூ.7 கோடிக்கு ஹைதராபாத் அணி, வாங்கியிருந்தது. எனவே நேகியை டெல்லி வாங்கும்வரையில், யுவராஜ்சிங்தான் காஸ்ட்லி வீரராக இருந்து வந்தார். ஆனால் பிற்பகலில் பவன் நேகி, அந்த பட்டத்தை யுவராஜிடமிருந்து பறித்துவிட்டார்.
பவன் நேகிக்கு ரூ.30 லட்சம் மட்டுமே அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆயினும், புனே மற்றும் டெல்லி அணிகள் போட்டி போட்டுக்கொண்டே இருந்ததால் ஏலத்தொகை அதிகரித்துவிட்டது.
இன்றைய ஏலத்தில், ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் ரூ.9.5 கோடிக்கு பெங்களூர் அணியால் வாங்கப்பட்டதுதான், நடப்பு சீசனில், நடைபெற்ற விலைமதிப்புமிக்க கொள்முதல்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரும், லோவர்-ஆர்டர் பேட்ஸ்மேனுமான நேகி, 56 டி20 போட்டிகளில் விளையாடி, சராசரியாக 19.16 ரன்கள் சேகரித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 134.92 ஆகும். போலவே, 46 விக்கெட்டுகளையும் நேகி வீழ்த்தியுள்ளார்.
உலக கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அந்த அணியிலும், பவன் நேகி இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், ஐபிஎல் தொடரிலும், பவன் நேகிக்கு, ஜாக்பாட் அடித்துள்ளது.