கடைசி கட்ட பரபரப்பு
17வது ஓவரின் முதல் பந்தில், புனே அணி 121 ரன்கள் எடுத்திருந்த முக்கிய கட்டத்தில், பென் ஸ்டோக்ஸ் 10 ரன்களில் நடையை கட்டினார். ஆனால் மறுமுனையில் அசராமல் ஆடினார் டோணி. அவரது உடல் மொழி, ஷாட் தேர்வு போன்றவை டோணி மீண்டும் விஸ்வரூபம் எடுக்க போவதற்கான சமிக்ஞைகளை கொடுத்தபடியே இருந்தன.
இமாலய இலக்கு
17 ஓவர்கள் முடிவில் புனே அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 130 ரன்களை சேர்த்திருந்தது. எனவே 18 பந்துகளில், 47 ரன்கள் என்ற இமாலய இலக்கு புனே அணிக்கு எதிரே இருந்தது. என்னவாகுமோ என்ற பரபரப்பில் இருந்தனர் ரசிகர்கள். அப்போதுதான் புறப்பட்டது டோணியின் டிரேட் மார்க் ஷாட்டுகள்.
டோணியின் ஆவேசம்
சிராஜ் வீசிய அந்த ஓவரிின் 4வது பந்தில் டோணி அபாரமாக லாங்-ஆன் திசையில் சிக்சர் விளாசினார். ஸ்லோவாக வீசிய அந்த பந்தை, தனது முழு பலம் கொண்டு அபாரமாக சிக்சராக மாற்றினார் டோணி. அடுத்த பந்திலேயே, பவுன்ஸ் செய்யப்பட்ட பந்தை அப்பர்-கட் செய்து பவுண்டரியாக மாற்றினார் டோணி. முன்னதாக திவாரி அடித்த பவுண்டரியின் உதவியால் ஓவர் முடிவில் 147 ரன்கள் எடுத்தது புனே.
பெஸ்ட் பவுலருக்கு ஹெலிகாப்டர் பரிசு
அடுத்ததாக 19வது ஓவரை வீச வந்தார் புவனேஸ்வர்குமார். இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் இவர்தான். பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு ஓவரில் வெற்றி வாய்ப்பை பறித்தவர் இவர். ஆனால் அந்த சாதனைகள் டோணியின் ஆவேசத்தின் முன்பு தவிடு பொடியானது. முதல் பந்தை வைடாக வீசினார் புவனேஸ்வர் குமார். மீண்டும் அந்த பந்தை வீசியபோது டோணி பவுண்டரி விளாசினார். 2வது பந்தும் பவுண்டரி. 3வது பந்தில் சிக்சர் பறக்க அரங்கம் அதிர்ந்தது. அந்த சிக்சர் வெகுநாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த ஹெலிகாப்டர் ஷாட் மூலம் வந்தது சிறப்பு. 19வது ஓவர் முடிவில் புனே அணி 166 ரன்கள் எடுத்தது.
கோட்டை விட்ட கேட்ச்
கடைசி ஓவரில் புனே வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் ரசிகர்கள் நகம் கடித்தனர். அந்த ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். முதல் பந்திலேயே திவாரி பவுண்டரி விளாசினார். ஆனால், பவுண்டரி எல்லையில் ரஷீத் கேட்சை மிஸ் செய்ததால் அது பவுண்டரியானது. 2வது பந்தில் திவாரியும், 3வது பந்தில் டோணியும், 4வது பந்தில் திவாரியும் சிங்கிள் ரன் சேர்த்தனர். 5வது பந்தில் டோணி 2 ரன்கள் எடுத்தார். எனவே கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் டிரா, 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
பெஸ்ட் ஃபினிஷர்
கடைசி ஓவரில் ஏற்பட்ட த்ரில்லால் ரசிகர்கள் சீட் நுனிக்கு வந்தனர். அந்த பந்தை டோணி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் புனே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோணி வின்னிங் ஷாட்டை அடித்து போட்டியை முடித்து வைத்ததை பார்த்து வெகுநாட்களான ரசிகர்கள் துள்ளி குதித்தனர். அடுத்த வருடம் சிஎஸ்கேக்கு தலைமையேற்று டோணி காட்டப்போகும் ஹெலிகாப்டர் ஷாட்டுகளுக்கு இது முன்னோட்டம் என்று சிலாகித்தனர் நெட்டிசன்கள். டோணி 34 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 61 ரன்களை குவித்து, காட்டுக்கு சிங்கம் யார் என்பதை காட்டிவிட்டார்.