டெல்லி: ஐபிஎல் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தற்போது 9வது ஐபிஎல் சீசன் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த சீசனில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் நடந்த 2வது குவாலிபையர் சுற்றில், குஜராத் லயன்சும், ஹைதராபாத் சன் ரைசர்சும் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தின.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிஞ்ச் 50 ரன்களை சேர்த்தார்.
இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் களமிறங்கியது. அந்த அணியின் ஷிகர் தவான் தொடக்கத்திலே ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதன் பின்னர் ஹென்ரி ஹூயிஸ் (11), யுவராஜ் சிங் (8), ஹூடா (4), கட்டிங் (8), ஓஜா (10) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் கேப்டன் வார்னர் மட்டும் தனி ஒரு ஆளாக நிலைத்து நின்று ரன்களை குவித்து வந்தார்.
கடைசி நான்கு ஓவர்களில் 45 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரில் 11 ரன்களும், 18-வது ஓவரில் 10 ரன்களும் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் பிராவோ வீசிய 19-வது ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் ஹைதராபாத் அணியின் வெற்றி உறுதியானது. கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
வார்னர் வின்னிங் சாட் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். 19.2 ஓவர்களில் ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆதிரடியாக ஆடிய வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 58 பந்துகளில் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 11 பந்துகளில் 27 ரன்கள் குவித்து பிபுள் சர்மா வெற்றிக்கு உறுதியாக இருந்தார். பெங்களூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் ஹைதராபாத் மோதவுள்ளது.