மும்பை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, இந்தியா-இங்கிலாந்து நடுவேயான 5வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து நடுவே 3 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 4வது டெஸ்ட் போட்டி மும்பையிலும், ஐந்தாவது டெஸ்ட் போட்டி சென்னையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் அந்த டெஸ்ட் போட்டி 16ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மரணமடைந்த நிலையில், தமிழக அரசு 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்க உத்தரவிட்டுள்ளது.
துக்கம் அனுசரித்து முடிந்த ஒரு சில நாட்களிலேயே மெரீனா பீச்சின் அருகேயுள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் ஆரவாரத்துக்கு நடுவே எப்படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது என யோசிக்கிறதாம் பிசிசிஐ. அதேநேரம் இதுவரை இறுதி முடிவை எடுக்கவில்லை.
டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை தொடங்கிய நேரத்திலேயே விற்று தீர்ந்துவிட்ட நிலையில், இடத்தை மாற்றுவது என்பது பெரும் சவால். அதேநேரம், தமிழக அரசின் மற்றும் மக்களின் கோபத்திற்கு ஆளாகிவிடக்கூடாதே என்ற தர்ம சங்கடம் ஒரு பக்கம்.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரத்தில் கேட்டபோது, சென்னைக்கு பதிலாக மாற்று மைதானம் தேடும் பணியை பார்த்துக் கொண்டுள்ளோம். அதேபோல தமிழக நிலவரத்தையும் கவனித்து வருகிறோம். நிலைமை அமைதியாக இருந்தால் போட்டி நடக்கும். இல்லாவிட்டால் வேறு மைதானத்தை ரெடி செய்து வருகிறோம் என்று கூறினர்.