தரம்சலா: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 21 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
ரவிசாஸ்திரி, சந்தீப் பாட்டீல், பிரவீண் ஆம்ரே ஆகியோரும் இந்திய தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களும் நேர்காணல் செய்யப்பட்டனர். இவர்களிடம் ஆலோசனை குழு உறுப்பினர்களான கங்குலி, சச்சின், விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் கடந்த இரு நாட்களாக நேர்காணலை நடத்தினர்.
இந்நிலையில் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான கூட்டம் தரம்சலாவில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இவர் ஓராண்டுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்படுவார். வெளிப்படையான முறையில் பயிற்சியாளருக்கான தேர்வு நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.
அனில் குப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மேலும் 14 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.