லண்டன்: பழைய சாதனையை நினைத்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. இறுதிப் போட்டி என்பது இன்னும் ஒரு போட்டி. இந்தப் போட்டியில் வெல்வது குறித்து மட்டுமே நாம் யோசிக்க வேண்டும். பழைய பெருமையை நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று இந்திய கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை இந்தியா, பாகிஸ்தான் இடையே சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக இரு நாட்டு ரசிகர்களும் ஆவலோடு காத்துள்ளனர்.
இந்த நிலையில் கேப்டன் கோஹ்லி செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இது இன்னும் ஒரு போட்டி. இதில் எப்படி வெல்வது என்பது மட்டுமே நமது கவலையாக இருக்க முடியும். இதற்கு முன்பு பாகிஸ்தானை வென்றது குறித்து நாம் பேசிக் கொண்டிருக்க கூடாது. கடந்த கால சாதனைகளால் இந்தப் போட்டிக்கு எந்தப் பலனும் கிடைக்காது.
யாருக்கும் வெற்றி உறுதியல்ல. யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். இந்தத் தொடரில் முதல் போட்டியில் நாம் பாகிஸ்தானை வென்றது இந்தப் போட்டியிலும் பிரதிபலிக்கும் என்று நான் நினைக்கவில்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கும் இங்கு எதுவும் உத்தரவாதம் இல்லை.
சிறப்பாக விளையாடும் அணி நிச்சயம் வெல்லும். பாகிஸ்தானை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களும் ஒரு அணியை வெல்லக் கூடியவர்கள்தான். கடந்த போட்டியை (இங்கிலாந்துடன் நடந்த போட்டி) நாம மறந்து விடக் கூடாது என்றார் கோஹ்லி.