சிட்னி: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் விராட் கோஹ்லி வெறும் ஒரு ரன் எடுத்து அவுட்டாகியுள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம் சிட்னி நகரில் இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியை நேரில் பார்க்கவும், கோஹ்லியை ஊக்குவிக்கவும் அவரின் காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா சிட்னி சென்றார்.
அனுஷ்கா சிட்னி சென்ற செய்தியை கேட்ட பலரும் அய்யய்யோ அவர் போய்விட்டாரா, இனி கோஹ்லி விளையாடியது மாதிரி என்று தலையில் அடித்துக் கொண்டனர். முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடியபோது இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடிய போட்டியை நேரில் காண அங்கு சென்றார் அனுஷ்கா.
அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்நிலையில் அவர் சிட்னி நகரில் இன்றைய போட்டியை காண அரங்கிற்கு வந்தபோதே அய்யய்யோ அனுஷ்கா வந்திருக்காரே, அப்போ கோஹ்லி இன்னைக்கும் அவ்வளவு தானா என்று ரசிகர்கள் அச்சம் அடைந்தனர்.
இந்நிலையில் தான் தவான் அவுட்டானதும் கோஹ்லி வந்தார். ஆஹா, கோஹ்லி அசத்திவிடுவார் என்று நினைக்கையில் 13 பந்துகளில் வெறும் ஒரு ரன் எடுத்த நிலையில் அவுட்டாகி ரசிகர்களின் மனதில் இடியை இறக்கிவிட்டார்.