மும்மூர்த்திகளின் ஆலோசனையின் பேரில்
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவைத் தேர்வு செய்தது கங்குலி, சச்சின், விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் அடங்கிய பிசிசிஐ ஆலோசனைக் கமிட்டிதான். இந்தக் குழுகவின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் பிசிசிஐ செயலாளர் சஞ்சய் ஜகதாலே செயல்பட்டார்.
57 விண்ணப்பங்கள்
பயிற்சியளர் பதவிக்கு மொத்தம் 57 விண்ணப்பங்கள் வந்தன. அதில் ரவி சாஸ்திரி, கும்ப்ளே, சந்தீப் பாட்டீல், பிரவீன் அம்ரே, லால்சந்த் ராஜ்புத், டாம் மூடி, ஸ்டூவர்ட் லா, ஆண்டி மோல்ஸ் என முக்கியஸ்தர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்தப் பட்டியல் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் அது 21 பேராக குறைக்கப்பட்டது.
நேர்காணல்
இந்த 21 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இறுதியில் அனில் கும்ப்ளே பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு வருட காலம் பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் ஸ்பின்னர்கள்
ரவி சாஸ்திரியும் சரி, கும்ப்ளேவும் சரி அருமையான ஸ்பின்னர்கள். இருவரும் பேட்டிங்கிலும் கை கொடுத்தவர்கள். இருப்பினும் பயிற்சியாளர் போட்டியில் கும்ப்ளே வென்று விட்டார்.
அனுபவம்
ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக 18 மாதங்கள் செயல்பட்டார். கும்ப்ளேவுக்கு சர்வதேச அளவில் பயிற்சியாளராக அனுபவம் எதுவும் கிடையாது.
கணிசமான வெற்றிகள்
ரவி சாஸ்திரி 2014ல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்தியா 1-3 என்ற கணக்கில் இழந்த நேரத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அப்போது டங்கன் பிளட்சர் பயிற்சியாளராக இருந்தார். அவரை டம்மியாக்கி சாஸ்திரியை இயக்குநராக்கினர். சாஸ்திரி காலத்தில் இந்தியா கணிசமான வெற்றிகளைப் பெற்றது.
உலகக் கோப்பை
அதன் பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா வென்றது. 2015ல் ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் அரை இறுதி வரை முன்னேறியது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 22 வருடங்களுக்குப் பின்னர் 2-1 என்ற கணக்கில் இலங்கையில் வைத்து வென்றது. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.
நல்ல லீடர்
ஆனால் அவரை விட்டு விட்டு கும்ப்ளே தேர்வானதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது - அனைவராலும் எளிதாக பழகக் கூடியவர் கும்ப்ளே. நல்ல லீடர் என்று பெயர் எடுத்தவர். அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லக் கூடியவர். சிறந்த திட்டமிடுபவர். வீரராக சாஸ்திரியை விட மிகப் பெரிய அனுபவம் கொண்டவர். வெற்றிக்காக சரியான உத்திகளை வகுக்கக் கூடியவர்.
வயதில் இளையவர்
சாஸ்திரியை விட வயதில் இளையவர் கும்ப்ளே. தற்போதைய இளம் இந்திய அணிக்கு சாஸ்திரியை விட இளையவரான கும்ப்ளேதான் பொருத்தம் என்று பலரும் கருதுகிறார்கள். தற்கால தலைமுறைக்கேற்றார் போல தன்னை மாற்றிக் கொள்ளும் பக்குவமும் அவரிடம் உண்டு என்பதும் கும்ப்ளே ஆதரவாளர்களின் கருத்தாகும்.
புள்ளிவிவரம்
கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 619 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 271 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 337 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ரவி சாஸ்திரி 150 டெஸ்ட் போட்டிகளில் விளஐயாடி 3830 ரன்கள் எடுத்து, 151 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். சாஸ்திரி ஒரு ஆல்ரவுண்டர். 245 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 3108 ரன்களை எடுத்து 129 விக்கெட்களை எடுத்துள்ளார்.
பார்க்கலாம், கும்ப்ளேவின் சுழல் தலைமையில் இந்திய அணி எதிரிகளைப் பந்தாடுகிறதா என்பதை!