மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே விலகி விட்டார்.
கும்ப்ளேவுக்கும், கேப்டன் கோஹ்லிக்கும் இடையே மோதல் முற்றியதைத் தொடர்ந்து இந்த விலகல் முடிவை கும்ப்ளே எடுத்துள்ளார். அதை விட முக்கியமாக மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இன்று புறப்பட்டுச் சென்ற இந்திய அணியுடன் கும்ப்ளே போகவில்லை.
சமீபத்தில் லண்டனில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் அடங்கிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைக் கமிட்டி கூடியது. அப்போது கோஹ்லி நேரில் ஆஜராகி கும்ப்ளே குறித்து புகார் கூறினார். இந்த நிலையில் தற்போது கும்ப்ளே தனது பதவியை உதறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியின்போது கும்ப்ளேவுக்கும், கோஹ்லிக்கும் இடையே மோதல் உச்சத்தை அடைந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. கும்ப்ளே மற்ற பவுலர்களுக்கு மட்டும் பயிற்சி அளித்து வந்தார்.
கோஹ்லி, கும்ப்ளே மோதலால் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கும்ப்ளேவை மாற்றியே தீர வேண்டும் என்பதில் கோஹ்லி பிடிவாதமாக இருந்தார். ஆனால் இதை ஏற்பதில் கிரிக்கெட் வாரியம் மற்றும் கங்குலி குழுவினருக்கு தயக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கும்ப்ளே அவரே போய் விட்டார்.
அவரே போனாரா அல்லது கங்குலி அன்கோ போகச் சொன்னதா என்பது தெரியவில்லை.
முன்னதாக கும்ப்ளேவின் பதவிக்காலத்தை நீட்டிப்பதில்லை என்று கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்திருந்தது. இது கும்ப்ளேவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களையும் அது வரவேற்றது. கும்ப்ளேவும் விண்ணப்பித்திருந்தார். இவையும் கூட நிலைமையை சிக்கலாக்கின.
இந்த நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயலதிகாரிக்கு கும்ப்ளே அனுப்பி வைத்துள்ளார்.