மும்பை: ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த், சவான், சாண்டிலா ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
6வது ஐ.பி.எல். போட்டியில் பிக்ஸிங்கில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த், சவான் மற்றும் அஜித் சண்டிலா உள்ளிட்ட 36 குற்றவாளிகளையும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் கடந்த வாரம் விடுவித்தது. ஆனால் அவர்கள் மீதுள்ள தடையை நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கேரள கிரிக்கெட் கூட்டமைப்பு ஸ்ரீசாந்த் மீண்டும் விளையாட அனுமதி வழங்க வேண்டும் என பி.சி.சி.ஐ.யிடம் கோரியிருந்தது. ஆனால் இரு கிரிக்கெட் வீரர்களும் வாழ்நாள் முழுவதும் விளையாட விதிக்கப்பட்ட தடை குறித்து மீண்டும் சிந்திப்பது என்பதற்கு இடமில்லை என அனுராக் தாகூர் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் பி.சி.சி.ஐ.யின் ஒழுங்கு குழு விதித்த தடை என்ற முந்தைய முடிவு தொடர்ந்து இருக்கும் என தாகூர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் என்பது வேறு. குற்ற நடவடிக்கைகள் என்பது வேறு. ஒழுங்கீனத்துடன் வீரர்கள் நடந்து கொண்டது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் அளித்த அறிக்கைகளின்படி கடந்த காலத்தில் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் வீரர்கள் மீதுள்ள தடை என்ற அதே முடிவு தொடரும் என்றும் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.