சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கோவை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி அணியை வீழ்த்தியது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், லைக்கா கோவை பிரதர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணியின் துவக்க வீரர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடினார். ஆனால், மற்ற வீரர்கள் கோவை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொதப்பியதால் அந்த அணி 95 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
வாஷிங்டன் சுந்தர் 48 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோவை தரப்பில் சிவக்குமார் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கோவை அணி களமிறங்கியது.
துவக்க வீரர்களான சூரியபிரகாஷ், அனிருத் சீதா ராம் ஆகிய இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். வெற்றியை நெருங்கிய நிலையில் சூரிய பிரகாஷ் 43 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
அதன்பின்னர் சீனிவாசன் இணைய, 12.5 ஓவர்களில் கோவை அணி இலக்கை எட்டியது. இதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அனிருத் அவுட் ஆகாமல் 48 ரன்கள் எடுத்திருந்தார்.