நாவலாசிரியரின் மகன்
முருகன் அஸ்வினைத்தான் யாருக்கும் தெரியாது. ஆனால் இவரது அப்பா ரொம்பப் பிரபலம். அவர்தான் இரா முருகன். எழுத்தாளர் சுஜாதாவின் அன்பைப் பெற்ற, பாராட்டுகளைப் பெற்ற, எனது வாரிசுகளில் ஒருவர் என புகழப்பட்டவர் இரா. முருகன்.
வசன கர்த்தா
இவர் சினிமாவிலும் சற்று முகம் காட்டியவர். கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன், அஜீத்தின் பில்லா 2 படங்களின் வசனகர்த்தா இந்த இரா முருகன்தான். இவரது மகன்தான் இந்த முருகன் அஸ்வின்.
போராளி
முருகன் அஸ்வின் ஒரு போராளி என்று சொல்லலாம். காரணம், அவரது போராட்டங்கள் அப்படி. இனிமேல் இவர் தேற மாட்டார் என்று பலராலும் பார்க்கப்பட்டவர் எம். அஸ்வின். ஆனால் பீனிக்ஸ் பறவை போல உயர்ந்து வந்து நிற்கிறார் அஸ்வின்.
விரல் விட்டு எண்ணும் அளவில்
எம்.அஸ்வின் விரல் விட்டு எண்ணும் அளவிலான போட்டிகளில்தான் விளையாடியுள்ளார். தமிழக அணியில் இடம் பிடித்து 3 ரஞ்சிப் போட்டிகள், இரண்டு 50 ஓவர் போட்டிகள், 6 டுவென்டி 20 போட்டிகளில் மட்டுமே இவர் விளையாடியுள்ளார்.
3 வருடமாக அணியிலிருந்து நீக்கம்
2012ம் ஆண்டு ரஞ்சி அணியில் இடம் பெற்று சரிவர ஆடாததால் நீக்கப்பட்டார் எம்.அஸ்வின். அதன் பின்னர் கடந்த 3 வருடங்களுக்கு அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இருப்பினும் சையத் முஷ்டாக் அலி டுவென்டி 20 போட்டித் தொடரில் இடம் பிடித்து தனது திறமையை மொத்தமாக கொட்டினார்.
பிரமாத ஆட்டம்
அந்தத் தொடரில் 6 போட்டிகளில் ஆடிய அஸ்வின் 10 விக்கெட்களைச் சாய்த்தார். இதில் 2 போட்டிகளில் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினார். இவரது பந்து வீச்சு மிரட்டும் வகையில் இருந்தது. இதுவே அவரை டோணி தலைமையிலான புனே அணி பெரும் தொகைக்கு ஏலம் எடுக்க முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
ஓய்வறியா சூரியன்
ஓய்வறியா சூரியன் என்பார்களே அதுபோலத்தான், தான் இத்தனை காலமாக ரஞ்சி அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத போதிலும் தொடர்ந்து கிரிக்கெட்டை விடாமல் ஆடிக் கொண்டிருந்தார் அஸ்வின். அதுதான் அவருக்கு நல்ல பயிற்சியாக மாறியதோடு, அவரது தவறுகளைச் சரி செய்து தேர்ந்த பந்து விச்சாளராக மாற அடிப்படையாக அமைந்தது. அந்தப் போராட்டத்திற்குத்தான் இன்று புனே அணியில் அவர் ரூ. 4.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு உரிய முறையில் அங்கீகாரம் பெற்றுள்ளார்.
பிரமாண்ட வீரராக உருவெடுக்க வேண்டும்
ஐபிஎல் இளம் வீரர்களுக்குக் கிடைத்துள்ள அபாரமான வாய்ப்பு. அதை எம்.முருகன் பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் இந்தியாவின் மிகச் சிறந்த வீரராக உருவெடுக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.
45 மடங்கு விலைக்கு நியாயம் கற்பிக்க வேண்டும்
முருகன் அஸ்வினுக்கு ஏலத்தில் அடிப்படை விலையாக ரூ. 10 லட்சம்தான் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவரை ஏலம் எடுக்க புனே முதலில் முடிவு செய்தபோது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் போட்டியில் குதித்தது. இதனால் விலை சரசரவென உயர்ந்து ரு. 4.5 கோடி என்ற அளவில் புனேவுக்குச் சாதகமாக முடிந்தது. அதாவது நிர்ணயிக்கப்பட்டதை விட 45 மடங்கு அதிக விலைக்கு போயுள்ளார் அஸ்வின். இதற்கு அவர் சிறப்பாக செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் வந்துள்ளது.
அஸ்வின் மாதிரியே ஸ்பின்னர்
ஆர். அஸ்வின் மாதிரியே எம். அஸ்வினும் ஒரு சுழற்பந்து வீச்சாளர்தான். அஸ்வின் படித்த அதே கல்லூரியில்தான் இவரும் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்துள்ளார். எனவே ஆர். அஸ்வின் மாதிரியே எதிர்காலத்தில் தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் எம். அஸ்வினும் புகழ் தேடித் தருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
டோணி பார்வையில் விழுந்ததால்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடந்த ஆண்டு வலைப் பயிற்சியின்போது எம். அஸ்வின் பந்து வீசுவதைப் பார்த்து கேப்டன் டோணியும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கும் அவரை கூப்பிட்டுப் பாராட்டியுள்ளனர். அப்போதே டோணியின் நம்பிக்கையைப் பெற்று விட்டார் அஸ்வின். அதுவும் கூட அவரை பெரும் விலை கொடுத்து புனே அணி வாங்க ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
சிவகங்கைச் சீமையிலிருந்து
இரா முருகனின் பூர்வீகம் சிவகங்கையாகும். உன்னைப் போல் ஒருவன் படத்தில் இரா முருகன் ஒரு வசனம் எழுதியிருப்பார்.. சாதாரண குப்பனோ சுப்பனோ இதை செய்ய முடியாத என்று. இன்று அது உண்மையாகியுள்ளது. பெரிய பெரிய வீரர்களே ஏலம் போக முடியாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் வெகு சாதாரண வீரரான இன்று முருகன் அஸ்வின் சாதனை படைத்திருக்கிறார் என்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியதுதான்.