திண்டுக்கல்: டிஎன்பிஎல் தொடரை வெற்றியுடன் துவக்க மதுரை ஜெயண்ட்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்த உள்ளன.
தமிழக பிரிமியர் லீக் டி20 தொடரின் முதல் 'சீசன்' தற்போது நடக்கிறது. இன்று நத்தத்தில் நடந்த 4 வது லீக் போட்டியில் மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 11 ஓவர்கள் முடிந்த நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. தொடக்க வீரர் ஜெகதீசன் 47 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
மழை நின்றபின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. 20 ஓவர்களுக்குப் பதிலாக 18 ஓவராக குறைக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய ஜெகதீசன் அரைசதம் கடந்தார். அவர் 50 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 71 ரன்கள் சேர்த்து அவுட்டாக, திண்டுக்கல் அணி 18 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் குவித்தது.
மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சார்பில் முருகானந்தம் 4 விக்கெட்டும், கணேஷ், சந்திரசேகர், தியாகராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதன் பின்னர் 143 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அருண் கார்த்திக், கணபதி விக்னேஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தியாகராஜன் மட்டும் நிலைத்து ஆடி 37 ரன்கள் சேர்த்தார். திண்டுக்கல் அணி சார்பில் கேதர்னாத், சஞ்சய் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் சன்னி குமார் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.