சாம்பியன்ஸ் டிராபி சோகம்
இந்தியாவைப் போலவே சாம்பியன்ஸ் டிராபியில் சோகக் கதையுடன் நாடு திரும்பிய அணி இலங்கை. இந்தியாவை வீழத்திய அந்த அணி பின்னர் பாகிஸ்தானிடம் படு தோல்வியைச் சந்தித்து வெளியேறியது. இதனால் இலங்கை அணி குறித்து விமர்சித்திருந்தார் தயாசிறி.
கொழுப்பு ஜாஸ்தி
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை அணியின் தோல்வி குறித்து விசாரிக்கப்படும், ஆய்வு செய்யப்படும். அணியில் பல வீரர்கள் குண்டாக உள்ளனர். அவர்களுக்கு உடலில் அளவுக்கு மீறி கொழுப்பு சேர்ந்துள்ளது. அப்படிப்பட்டவர்களை அணியிலிருந்து நீக்க வேண்டும்.
16%தான் இருக்க வேண்டும்
விளையாட்டு வீரர்களுக்கு உடலில் இருக்க வேண்டிய கொழுப்பு சத்தின் அளவு சர்வதேச அளவில் 16 சதவீதம்தான். ஆனால் இலங்கை வீரர்கள் பலருக்கு இது 25 சதவீதமாக உள்ளது என்று கூறியிருந்தார் தயாசிறி. இதுதான் அனலைக் கிளப்பி விட்டு விட்டது.
அதை குரங்கு சொல்லக் கூடாது
இதுகுறித்து வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா கடுமையாக விமர்சித்துள்ளார். அமைச்சர் பெயரைக் குறிப்பிடாமல் அவரைக் குரங்கு என குறிப்பிட்டுள்ளார் மலிங்கா. இதுகுறித்து அவர் கூறுகையில், கிளிகளின் கூட்டில் என்ன இருக்கிறது என்பது குறித்து குரங்குக்கு எப்படித் தெரியும். கிளிக் கூட்டுக்குள் அத்துமீறி நுழைந்து குரங்கு பேசுவது போல உள்ளது என்று கூறி தயாசிறியைக் கலாய்த்துள்ளார்.
இதனால் கடுப்பாகிப் போன தயாசிறி தற்போது மலிங்காவுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.