டெல்லி: ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் யூசுப் பதான், மணீஷ் பாண்டேவின் அரை சதத்தால் கொல்கத்தா வெற்றி பெற்றது.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற 18வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஜாகீர்கான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது.
கொல்கத்தா அணியின் ஓப்பனிங் சுமாராகத்தான் இருந்தது. தொடக்க வீரர்களான கம்பீர் 14, கிராண்டோமி 1, உத்தப்பா 4 ரன்கள் என வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையை கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த யூசுப் பதான் மற்றும் மணீஷ் பாண்டே ஜோடி சிக்ஸர், பவுண்டரிகளை பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடி இந்த ஜோடியை பார்த்த டெல்லி பவுலர்கள் அதிர்ந்து போயினர். டெல்லி பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இருவரும் அரை சதம் கடந்தனர்.
யூசுப் பதான் 2 சிக்ஸர், 6 பவுண்டரி உட்பட 39 பந்தில் 59 ரன்கள் குவித்து அவுட்டானார். கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது.
மொகமது ஷமி மற்றும் மேத்யூஸ் ஆகியோருக்கு ஓவர் இருக்கும் நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மிஸ்ரா வீசினார். முதல் பந்தை தவற விட்ட கிறிஸ் வோக்ஸ் 2-வது பந்தில் ஸ்டம்பிங் ஆனார். இதனால் கடைசி நான்கு பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. சுனில் நரைன் களம் இறங்கினார்.
3-வது பந்தில் ஒரு ரன் அடித்தார். கடைசி 3 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தை மணீஷ் பாண்டே எதிர்கொண்டார். அந்த பந்தை சிக்ஸருக்கு விளாசினார்.
அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் அடிக்க கொல்கத்தா அணி 1 பந்து மீதமுள்ள நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மணீஷ் பாண்டே 49 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 69 ரன்கள் எடுத்து கொல்கத்தாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.