டெல்லி: நாம் இனி உலக சாம்பியன் இல்லை.. இதுதான் இந்திய ரசிகர்களின் ஒரே வருத்தம். நாம் கடந்த முறை தட்டிச் சென்ற சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விட்டது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கி விட்டது.
சிட்னி மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்களைப் போலவே இந்தியாவில் உள்ள ரசிகர்களும் இந்தியாவின் வெற்றிக்காக காத்திருந்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றது அவர்களை பெரும் சோகமாக்கி விட்டது.
டெல்லியில் இந்தியா ஆஸ்திரேலியா போட்டியை ஆயிரக்கணக்கானோர் கூடி பார்த்து ரசித்தனர். ஆனால் இந்தியா தோல்வி முகத்திற்கு வந்தபோது அவர்கள் பெரும் சோகமாகிப் போனார்கள்.
இந்தியாவின் தோல்விக்கு நடுக்கள வீரர்கள் சரியாக சோபிக்காமல் போனதுதான் காரணம் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அவர்கள் சரியாக விளையாடவில்லை. நின்று ஆடவில்லை என்பது ரசிகர்களின் கருத்தாகும்.
குறிப்பாக விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் ஆட்டம் சரியாக இல்லாமல் போனது ரசிகர்களை ஏமாற்றி விட்டது.
அடுத்த உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவுக்கு நல்ல பயிற்சி தர வேண்டும் என்றும் பல ரசிகரக்ள் கருத்து தெரிவித்துள்ளனர்.