மெல்போர்ன்: உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி மீது ஒரு புது சர்ச்சை கிளம்பியுள்ளது.
உலகக் கோப்பையை வென்ற பின்னர் தங்களது டிரஸ்ஸிங் ரூமில் வைத்து உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
குறிப்பாக வேகப் பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன் மீதுதான் சர்ச்சை வெடித்துள்ளது. இதுதொடர்பாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதில் டிரஸ்ஸிங் ரூமில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆங்காங்கே உள்ளனர். மிட்சல் ஜான்சன், ஒரு குளிர்பான பெட்டி மீது உலகக் கோப்பையை வைத்து அதற்கு முன்பு நிற்கிறார். அவரது கையில் மது பாட்டில் போல உள்ளது. பீர் பாட்டில் போலத் தெரிகிறது. அதை எடுத்து உலகக் கோப்பை மீது ஊற்றி சிரித்தபடி அதை ரசிக்கிறார் ஜான்சன்.
உலகக் கோப்பையை வெல்ல அத்தனை அணிகளம் உயிரைக் கொடுத்து போராடின. ஆனால் அது கிடைக்காமல் போய் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். வலியுடன் திரும்பினர். ஆஸ்திரேலியாவே சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த நிலையில், அந்த கோப்பை மீது பீர் ஊற்றி விளையாடிய ஜான்சன் செயல் சர்ச்சையைக் கிளப்புவதாக உள்ளது.