லார்ட்ஸ்: 2017 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஒரு ரன்னில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தவறவிட்டார்.
இந்தியாவில் ஆண்கள் விளையாடும் கிரிக்கெட்டுக்கு இருக்கும் வரவேற்பில் பத்தில் ஒரு பங்குகூட மகளிர் கிரிக்கெட்டுக்கு இல்லாத நிலை இருந்தது. உலக அரங்கில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பல சந்தர்ப்பங்களில் சாதனை புரிந்து கிரிக்கெட் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 7 முறை அரைசதம் அடித்த ஒரே வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் மிதாலி ராஜ். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சார்லட்டின் சாதனை முறியடித்து, ஒரு நாள் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் 31 பந்துகளில் 17 ரன்கள் குவித்த போது, மிதாலி ராஜ் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் மிதாலி குவித்த ரன்கள் எண்ணிக்கை 409 ஆனது. இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீராங்கனை டேமி பீமாண்ட் (410 ரன்கள்) என்ற சாதனையை ஒரு ரன்னில் மிதாலி ராஜ் தவறவிட்டார்.
உலகக் கோப்பை தொடரில் 9 போட்டிகளில் பங்கேற்றுள்ள மிதாலி ராஜ், ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களுடன் 409 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் 404 ரன்களுடன் ஆஸ்திரேலிய வீராங்கனை எல்சி பெர்ரி மூன்றாம் இடத்தில் உள்ளார்.