அழகிய வீராங்கனை
இந்திய விளையாட்டு உலகில் அழகோடு திகழும் திறமைசாலிகளில் மித்தாலியும் ஒருவர். இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்தவர். தற்போது கேப்டனாக இருப்பவர்.
சினிமாவுக்கு இழுக்க முயற்சி
தன்னை சினிமாவில் இழுக்க பலர் முயற்சி செய்ததாகவும், ஆனால் தான் நைஸாக தப்பி விட்டதாகவும் சிரித்தபடி கூறியுள்ளார் மித்தாலி ராஜ். தான் மட்டும் ஆசைப்பட்டிருந்தால் இன்னேரம் கிரிக்கெட்டில் தன்னைப் பார்த்திருக்க முடியாது என்றும் கூறுகிறார் மித்தாலி.
ஆசை காட்டினார்கள்
இதுகுறித்து மித்தாலி ராஜ் அளித்த ஒரு பேட்டியில், எனக்கு நல்ல உடல் கட்டு இருப்பதால் பலரும் சினிமாவில் என்னை நடிகையாக பார்க்க விரும்பினர். நீங்கள் அழகாக, நல்ல உடல் வாகுடன் உள்ளீர்கள். நடிக்கலாமே என்று பலர் ஆசை காட்டியுள்ளனர்.
பார்க்க மட்டுமே பிடிக்கும்
ஆனால் எனக்கு படம் பார்க்க மட்டுமே ரொம்பப் பிடிக்கும், நடிக்க பிடிக்கவே பிடிக்காது என்று கூறி கையெடுத்து கும்பிட்டு அனுப்பி விட்டேன். நடிக்கப் போனால் விளையாட்டில் கவனம் பதிக்க முடியாது.
சச்சின் மட்டும் நினைத்திருந்தால்
சச்சின் மட்டும் நினைத்திருந்தால் இந்த நேரத்திற்கு மிகப் பெரிய நடிகராக ஜொலித்திருக்க மாட்டாரா. ஆனால் விளையாட்டுதான் அவருக்கு முதல் முக்கியம். எனக்கும் அப்படியே. நான் விளம்பர் படங்களில் நடித்துள்ளேன். ஆனால் நிச்சயம் சினிமாவில் நடிக்க மாட்டேன்.
எதிர்காலம் எனக்குத் தெரியாது
அதேசமயம், எதிர்காலத்தில் எப்படி இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. அதை யாராலும் கணிக்க முடியாது.என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு கிரிக்கெட் மட்டுமே என்றார் மித்தாலி.
உலகக் கோப்பை கனவு
மித்தாலி தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது. உலகக் கோப்பைக் கனவுடன் இந்தியா உள்ளது. கோப்பையை வெல்லட்டும் இந்தியா!