புனே: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ள முடிவில் மாற்றமில்லை என இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி தெரிவித்தார்.
ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பை துறந்த பிறகு முதல்முறையாக இன்று நிருபர்களை, புனே நகரில் சந்தித்து பேட்டியளித்தார் டோணி. அவர் கூறுகையில், எனது முடிவில் மாற்றமில்லை. இரட்டை கேப்டன்கள் நடைமுறையில் எனக்கு எப்போதுமே நம்பிக்கையிருந்ததில்லை. ஒருநாள்-டெஸ்ட் போட்டிகளில் ஒரே கேப்டன் செயல்படுவதே நல்லது.
கோஹ்லி திறமையானவர். கேப்டனாக சிறப்பாக செயல்படுவார் என நம்பிக்கையுள்ளது. அனுபவம் கிடைக்கும்போது கேப்டன் பொறுப்பு மேலும் சிறப்பானதாக மாறும்.
நான் கேப்டன் என்ற வகையில் சிறப்பான காலங்களையும் கடந்துள்ளேன், மிகவும் கடினமான காலங்களையும் கடந்துள்ளேன். தொடர்ந்து 4வது வீரராக களமிறங்கவே விரும்புகிறேன். கடைசி கட்டத்தில் இளம் வீரர்கள் பதற்றப்பட வாய்ப்புள்ளது. அவர்கள் ஃப்ரீயாக முன்னமே களமிறங்கி அவர்கள் திறமையை காட்டட்டும். நான் கடைசி கட்டத்தில் களமிறங்குவேன்.
முன்னாள் கேப்டன் என்ற வகையில், வியூகங்கள் வகுக்கும்போது புதிய கேப்டன் கோஹ்லிக்கு உதவிகள் செய்ய தயாராக உள்ளேன். விக்கெட் கீப்பர் என்பவர் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் துணை கேப்டன்தான். ஏனெனில் கீப்பராக ஆடும் வீரருக்கு ஆட்டத்தின் போக்கை எளிதாக யூகிக்க முடியும். இவ்வாறு டோணி தெரிவித்தார்.