ஹர்பஜன்சிங் காட்டம்
ஐபிஎல் தொடரில் ஹர்பஜன்சிங் எகனாமி ரேட் 6.48 என்ற அளவில்தான் இருந்தது. இந்த நிலையில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டித்தொடரில் ஹர்பஜன்சிங் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து அவர் ஆதங்கம் வெளிப்படுத்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். டோணியை இந்திய அணியில் தேர்வு செய்துள்ளது குறித்து தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் கூறுகையில், டோணியின் பேட்டிங் மட்டுமல்ல அவரது அனுபவம், முடிவெடுக்கும் திறமை உள்ளிட்ட மேலும் பல காரணங்களாலும் அவரின் தேர்வுக்கு காரணம் என கூறியிருந்தார்.
டோணி பேட்டிங் சரியில்லை
இதுகுறித்து, ஹர்பஜன்சிங் கூறியுள்ளதாவது: டோணி பேட்டிங் தவிர்த்த வேறு பல விஷயங்களிலும் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் முன்பு போல இப்போது பேட்டிங் செய்ய முடிவதில்லை என்பதை கவனிக்க முடிகிறது. டோணி கேப்டனாக இருந்தவர், அவர் விளையாட்டின் போக்கை கண்டுபிடித்து வழிநடத்துவார். சில தருணங்களில் இளம் வீரர்களுக்கு பதற்றம் ஏற்படும்போது டோணி அருகே இருப்பது ஊக்கம் தரும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
நானும்தான் சீனியர்
ஆனால், எனக்கு எந்றரு வரும்போது, டோணிக்கு கொடுக்கும் இந்த கவுரவம் கிடைப்பதில்லை. நானும் 19 வருடமாக கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இரு உலக கோப்பைகளை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்துள்ளேன். ஆனால் ஒருவருக்கு கவுரவம் தரப்படுகிறது, மற்றவர்களுக்கு கவுரவம் தரப்படவில்லை. இவ்வாறு முக்கியத்துவம் தரப்படாத வீரர்கள் வரிசையில் நானும் ஒருவன்.
ஆசை உள்ளது
ஏன் என்ற கேள்வியை தேர்வாளர்களை நோக்கிதான் கேட்க வேண்டும். என்னை நானே புகழ்ந்து கொள்வது சரியாக இருக்காது. ஆனால் பிற வீரர்களைவிட நான் எந்த வகையில் குறைந்துவிட்டேன் என்பதுதான் எனது கேள்வியாக உள்ளது. நானும் நாட்டுக்காக விளையாட ஆசைப்படுகிறேன்.
கம்பீருக்கும் அதே கதி
எனது பெயரும், கவுதம் கம்பீர் பெயரும் சாம்பியன்ஸ் டிராபி அணி தேர்வுக்கான பரிசீலனையில் கூட இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இருவருமே ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடுவதே நமக்கு இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். ஒருவேளை எங்கள் இருவரையும் இளம் வீரர்கள் அளவுக்கு ஃபீல்டிங் செய்யாதவர்கள் என்று கூறி எடுக்கவில்லையோ என்னவோ? அப்படியே இருந்தாலும் அதையாவது சொல்லலாம். எனது வீக்னஸ் எது என்பதை பார்த்து நான் திருத்திக்கொள்வேன். ஆனால் காரணமே சொல்லப்படுவது இல்லை.
அஸ்வினுக்கு விதிவிலக்கு
காயத்திலிருந்து மீண்ட வீரர் உடல் தகுதியை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் அஸ்வினுக்கு அந்த விதிமுறைப்படி டெஸ்ட் நடைபெறவில்லை. ஐபிஎல் தொடரில் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியதே நிர்வாகம்தான் என்பதால் அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கலாம். அதற்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியவர்கள் பெயரையும் பரிசீலித்திருக்கலாம். சிறந்த வீரர்கள் ஒருசிலருக்கு விதிவிலக்கு அளிப்பதில் தப்பில்லை. இருப்பினும், அஸ்வினுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தியிருக்கலாம்.
வாழ்த்துக்கள்
அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அவர் முழு உடல் தகுதி பெற்றிருப்பார், பொய் சொல்லமாட்டார் என நம்புகிறேன். உடல் தகுதி பெற வாழ்த்துகிறேன். விராட் கோஹ்லி, அனில்கும்ப்ளே ஆகியோர் உடல் தகுதி இல்லாதவீரரை கொண்டு விளையாட விரும்ப மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல எனது வாழ்த்துக்கள். இவ்வாறு ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.