பெங்களூர்: இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோணி தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். அதிலும் ஒரு சாதனையை படைத்துள்ளார் டோணி.
இந்தியா - இங்கிலாந்து மோதிய மூன்றாவது டி20 போட்டி பெங்களூரில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோணி, டி20 அரங்கில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.
டோணி 36 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் அரை சதத்தைப் பதிவு செய்ய அதிக போட்டிகள் எடுத்துக் கொண்ட வீரர் என்ற சாதனையை டோணி படைத்துள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு முதல் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி வரும் டோணி, கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து தனது 76 வது போட்டியில் முதல் அரை சதத்தினை பதிவு செய்தார். இதற்கு முன்பு டி20 போட்டியில் டோணியின் அதிக பட்ச ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் என்று இருந்தது.
அயர்லாந்தைச் சேர்ந்த வீரர் கேரி வில்சன் 42வது போட்டியில் முதல் அரை சதத்தைப் பதிவு செய்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.