பெர்த்: பெர்த் நகரில் இந்திய கேப்டன் டோணியிடம் மூத்த புகைப்பட பத்திரிக்கையாளர் ஒருவர் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார்.
உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்காக பெர்த் சென்றுள்ளது இந்திய அணி. நேற்று முன்தினம் பயிற்சியின் போது பேடுகளைக் கட்டிக் கொண்டு வலை அருகே நின்று கொண்டிருந்தார் டோணி.
அப்போது அங்கே வந்த மூத்த புகைப்பட பத்திரிக்கையாளர் ஒருவர், "மஹி (டோனி) நீங்கள் 2004-05-ல் இருந்தது போல் இல்லை. அப்போதெல்லாம் அட்டகாசமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பீர்கள்." என டோணியிடம் பேச்சுக் கொடுத்தார்.
அதற்கு டோணி, "பொய் சொல்லாதீர்கள். 2004ஆம் ஆண்டு உங்களுக்கு என்னை தெரியவே தெரியாது, நீங்கள் என்னவென்றால் புகைப்படத்துக்கு நான் போஸ் கொடுப்பது பற்றி கூறுகிறீர்கள்." என பதில் அளித்தார்.
உடனே, "நீங்கள் அறிமுகமான வங்கதேசத் தொடரின் போது நான் இருந்தேன்." என்றார், அந்த புகைப்பட பத்திரிகையாளர்.
ஆனால், டோணி விடாமல் மீண்டும், "வங்கதேசத்துக்கு எதிராக நான் எனது அறிமுகப்போட்டியில் ஆடினேன் என்று உங்களுக்கு யார் கூறியது? அது கூட உங்களுக்குத் தெரியவில்லை" என்று கேலிச்சிரிப்புடன் கூறினார். (டோணி டிசம்பர் 2004-இல் வங்கதேசத்துக்கு எதிராகத்தான் தன் முதல் போட்டியில் ஆடினார்).
உடனே, சுதாரித்துக் கொண்ட புகைப்பட பத்திரிகையாளர், "இல்லையென்றால் ஜிம்பாப்வேக்கு எதிராக முதல் போட்டியில் ஆடினீர்களா?" என்று கேட்க, சுற்றி இருந்தவர்கள் சிரிக்கத் தொடங்கினார்கள்.
அவர் குழம்பியதைப் பார்த்த டோணியும் புன்னகைத்தபடியே, "பாருங்கள், இதனால்தான் பத்திரிகையாளர்களை நம்பக்கூடாது" என இந்தியில் கூறினார்.