பெங்களூர்: டோணியை ஒய்வு பெற கட்டாயப்படுத்த கூடாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜி.ஆர்.விஸ்வநாத் வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி விஸ்வநாத் கூறுகையில், "கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது தனிப்பட்ட அந்த வீரரை பொறுத்தது. பிறர் அதை வலியுறுத்த கூடாது. டோணி இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு உழைத்துள்ளார். அவருக்கு எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது நன்கு தெரியும்.
பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள், ஒரு வீரருக்கு தேவைப்படும் அளவுக்கு, சிக்னல்களை கொடுத்துவிடுகிறார்கள். எனவே அந்த வீரர் வெளியேற்றத்திற்கு அவராகவே தயாராகிவிடுவார். முன்பெல்லாம் இப்படி கிடையாது. திடீரென வீரர்களை நீக்கிவிடுவார்கள். மீண்டும் அணிக்கு திரும்பிவர முடியாமல் போன பல வீரர்கள் உள்ளனர்.
விராட் கோஹ்லியின் ஆக்ரோஷ செயல்பாடு நல்லதுதான். எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு கோஹ்லி களமிறங்குகிறார். இது ஒரு இளம் அணி. இதுவரை கோஹ்லி தலைமையிலான இந்த இளம் அணி பெற்ற வெற்றி சதவீதம் பாராட்டும்வகையில் உள்ளது.
டெஸ்ட் போட்டிகளில், முன்பெல்லாம், நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 70 ஓவர்கள் வீசப்படும். 250 ரன்கள் சேகரித்தாலே திருப்தி. ஆனால், இப்போது 90 ஓவர்கள் வீசப்படுகிறது. இப்போது டிரா செய்வதை காட்டிலும், வெற்றிபெறுவதில்தான் முனைப்பு காட்ட வேண்டியது அவசியம். வெற்றி பெறும் கலையை கோஹ்லிக்கு அனுபவம் கற்றுத்தரும். இவ்வாறு விஸ்வநாத் கூறியுள்ளார்.