யார் இந்த சிராஜ்
ஹைதராபாத்தில் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த கவுஸ் முகமது என்பவரின் மகன் முகமது சிராஜ். ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரின் மகனான சிராஜ், கிரிக்கெட்டில் வல்லவராவார்.
படிப்பில் ஆர்வம் இல்லை
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறியதாவது: சிராஜ் ஒரே இரவில் கதாநாயகன் ஆகியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களது மூத்த மகன் சாப்ட்வேர் என்ஜீனியராக உள்ளார். ஆனால் இளைய மகன் சிராஜுக்கோ படிப்பில் ஆர்வம் இல்லை. எப்போதும் கிரிக்கெட் விளையாடி கொண்டே இருப்பார்.
ஊக்கமாக உள்ளது
படிக்காமல் விளையாட்டில் மட்டும் ஆர்வமாக உள்ள சிராஜை நாங்கள் அவ்வப்போது கண்டிப்போம். எனினும் இதுபோன்ற நல்லது நடப்பதற்காகத்தான் என்று தற்போது புரிகிறது என்றனர். எந்தவித பயிற்சி நிலையங்களுக்கும் சென்று பயிற்சி எடுக்காமலேயே ஹைதராபாத் யு22 அணிக்கு விளையாடி வந்த சிராஜ் பல்வேறு கோப்பைகளை பெற்று குவித்துள்ளார். பிறகு கடந்த 2015-16-இல் நடைபெற்ற ராஞ்சி டிராப்பியில் முதல்முதலாக விளையாடினார்.
மிகப் பெரிய வீட்டில் தங்க வேண்டும்
அந்த சீசனில் நடந்த 9 மேட்சுகளில விளையாடிய அவர் 41 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்னர் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். எனினும் ஐபிஎல்லில் ஏலம் எடுக்கப்பட்டது மிகப் பெரிய ஊக்கத்தை அவருக்கு கொடுத்துள்ளது.
ஐபிஎல் ஏலம் குறித்து சிராஜ் கூறுகையில் சாதாரண சிறிய வீட்டில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களை மிகப் பெரிய வீட்டில் தங்க வைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.
வாயடைத்து போனேன்
ஐபிஎல்லில் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது குறித்து அறிந்த முதல் 10 நிமிடங்கள் எனக்கு பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. கடந்த 30 ஆண்டுகளாக எனது தந்தை ஆட்டோ ஓட்டி வருகிறார். அவரது பணியை விடுமாறு நான் வலியுறுத்தியும் எனது பேச்சை அவர் கேட்க மாட்டார். தற்போது அவர் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்தி விட்டி வீட்டில் ஓய்வு எடுக்க வைக்க முடியும் என்று நம்புகிறேன்.
நினைக்கவில்லை
ஒரே இரவில் பிரபலமாவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. கடந்த 2, 3 ஆண்டுகளாக ஐபிஎல் மேட்சுகளில் விளையாட வேண்டும் என்ற எனது கனவு தற்போது நனவானது என்றார். மிகப் பெரிய வீரர்களான இஸாந்த் சர்மா, இர்ஃபான் பதான் உள்ளிட்டோரும் ஏலம் எடுக்கப்படாத நிலையில் ஆட்டோ ஓட்டுநரின் மகன் அதிகப்பட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது அப்பகுதி மக்களை மகிழிச்சியில் ஆழ்த்தியுள்ளது.