வின்ஹோக்: நமிபியா கிரிக்கெட் அணியின் வீரர் ரேமண்ட் வான் ஸ்கூர், ஆடுகளத்திலேயே உயிரிழந்த சம்பவம், கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நமிபியா அணிக்காக சுமார் 200 ஆட்டங்களுக்கு மேல் விளையாடியவர், ரேமண்ட் வான் ஸ்கூர். 25 வயதேயான இளம் கிரிக்கெட் வீரர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடந்த உள்ளூர் ஒருநாள் போட்டியில், 15 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார்.
பதறிப்போன சக வீரர்கள், உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தனர். பரிசோதனையில் மூளை கட்டியால் பாதிக்கப்பட்டு, பக்கவாதத்தால் அவர் மயங்கி சரிந்தது தெரியவந்தது.
கடந்த 5 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரேமண்ட் வான் ஸ்கூர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 92 முதல்தர போட்டிகளில் 5 சதம் உள்பட 4,303 ரன்கள் எடுத்துள்ள ரேமண்ட் 15 வயதுக்கு உட்பட்ட நமிபியா அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பில் ஹியூக்ஸ், பந்து பட்டு, மைதானத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்த இச்சம்பவத்தை போலவே இப்போது நமீபியாவிலும் நடந்துள்ளது.