சென்னை: டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி முதலிடத்திற்கு முன்னேறியது என்பது உலகக்கோப்பையை வென்றது போல மகிழ்ச்சியாக இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. முன்னதாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா இலங்கை அணியிடம் படுதோல்வி அடைந்ததன் மூலம் தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டது.
இதனால், விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி முதலிடத்தைப் பிடித்தது. இந்திய அணி முதலிடத்தை தக்கவைக்க வேண்டுமானால் மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற்ற கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், 4 நாட்களாக தொடர் மழை பெய்ததால் அப்போட்டி டிராவில் முடிந்தது. எனினும் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இதனால், டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை பின்னுக்குத் தள்ளி முதன் முறையாக முதலிடத்தை பிடித்தது. இது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்ததாவது: டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி முதலிடத்திற்கு முன்னேறியது என்பது மிகப் பெரிய சாதனை. தற்போது உலகக்கோப்பையை வென்றது போல மகிழ்ச்சியாக இருக்கிறது.
முதலிடத்தை தக்க வைக்க வேண்டும் என்பது சவால் நிறைந்து. ஏனெனில், பின்வரும் தொடர்கள் அதற்கு முக்கிய காரணம். அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனான தொடர்களில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இதில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனான தொடர்கள் கடினமாக இருக்கும் என்று கூறினார்.
சமீபத்தில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.